31. சத்திய நாயனார்
கீழையூர் அருகிலுள்ள விரிஞ்சையூரில் வேளாளர் குலத்தில் சக்தியர் பிறந்தார். அடியார் நிந்தனை எனும்பாதகத்தைப் புரிவோரை இம்மையில் தண்டித்தால் அப்பாவம் மறுமையில் தொடராது. அப்படி தண்டிக்காதிருப்பின் செய்த பாவம் ஒன்றுக்கு ஆயிரமாக வளர்ந்து மறுமையிலே துன்புறுத்தும். எனவே அதை முளையிலேயே களைவது நன்று.
அடியார் நிந்தனை செய்பவரை இம்மையிலேயே கருணை கொண்டு தண்டித்து வந்தார் சக்தியர். அடியார்களைப் பழித்து யாரேனும் இகழ்ந்து உரைப்பாரேல் அவர் நாவை குறட்டினால் பிடித்து இழுத்து கத்தியால் அரிவர். அதனால் அவர் சக்தியர் எனப்பட்டார். தன் திருத்தொண்டினை பல ஆண்டுகள் செய்துவந்து இறவன் அடி சேர்ந்தார்.
32. சாக்கிய நாயனார்
திருச்சங்கமங்கை என்ற ஊரில் வேளன் குலத்தில் பிறந்தார் சாக்கியர். கல்வி கேள்விகளில் சிறந்தார். எல்லா உயிர்களிடத்தும் அன்புடையவராயிருந்தார். எங்கே இருந்து வந்தேன், எங்கே போகிறேன், பிறப்பு, இறப்பு ஆகியவைகள் உள்ளத்தை குடைந்தன. சாதலையும் பிறத்தலையும் தவிர்க்க நினைத்தார். காஞ்சிநகர் சென்றார். நன்கு கற்றறிந்து அறிஞர் ஆனார். ஈர்ப்பால் சாக்கியமதத்தைச் சார்ந்தார். பின்னர் சிவநெறியே உயர்ந்தது எனச் சிந்தைக் கொண்டார். புறத்தே சிவ வேடம் மேற்கொள்ளவில்லை. சிவலிங்க வழிபாடு சிறந்தது. தெளிந்தது சாக்கியர் உள்ளம்.
தினமும் சிவலிங்கத்தைக் கண்டபின்னரே உணவு உண்பார். ஒர்நாள் வழியில் ஓர் சிவலிங்கம் இருக்க கண்டர். வழிபட நினைத்தார். மலர்கள் இல்லை. அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து மலராக நினைத்து போட்டார், இறைவனும் கல்லை மலராக்கி ஏற்றுக்கொண்டார். அடுத்தநாள் அங்கு வந்தவர் முதல் நாள் நான் ஏன் அப்படி நடந்தேன். ஈசன் செயல். அதேபோல் இன்றும் செய்வேன் என மீண்டும் செங்கல்லால் பூஜித்தர். அன்பு நெறியால் தொண்டர்கள் செய்யும் செயல் இறைவனுக்கு உகந்த பூசையாகிறது.
ஒருநாள் வழிபடமறந்து உணவு உண்ண அமர்ந்தார். அப்பொது கல்லெறியாமல் சாப்பிடுகிறோமே எனக்கூறி எழுந்தார். கல்லை எடுத்துக் கொண்டு பேரன்புடன் ஓடிவரும் சாக்கியர்முன் சிவலிங்கம் இருக்க வில்லை. உமாதேவியருடன் சிவன் இருந்து அருள் புரிந்தார். சாக்கியர் சிவலோகம் அடைந்தார்.
33. சிறப்புலிய நாயனார்
திருஆக்கூர் என்ற ஊரில் மறையவர் குலத்தில் சிறப்புலி பிறந்தார். தன்னிடம் உள்ள பொருள்கள் யாவும் சிவன் தந்தது என எண்ணி அடியவர்கள் கேளாமுன்னமே அடியவர்கட்கு கொடுத்து மகிழ்பவர். அடியவர்களிடமும் ஆண்டவனிடமும் அளவற்ற பக்தி கொண்டு பல திருத்தொண்டுகள் செய்து வந்தார்.
பக்தியின் முதற்படி தம்மிடம் இருப்பதை பிறர்க்கு கொடுப்பதே. சிறப்புலியார் தன்னை நாடிவந்தவர்களுக்கு எல்லாம் மாரிபோல் வாரி வழங்கும் தன்மையர். ஆதி மந்திரமாகிய ஐந்தெழுத்தோதி சிவவேள்வி செய்பவர். சிவ புண்ணியங்கள் பல செய்து இறைவன் இதயத்தில் நிறுத்தி அடியவர்பால் அன்பு கொண்டு அவர்கட்கு வேண்டியன வேண்டியாங்கு கொடுத்து அம்பலவாணர் திருவடி நிழலில் கலந்தார்.